ஒவ்வொரு வருடமும் மிக ரகசியமாகவே பட்ஜெட்
தயாரிக்கப்படுகிறது. இந்த வருடம் கூட, ஜூன் மாதம் 27 முதல் இந்த ரகசிய
ஏற்பாடு துவங்கியது. நிதி அமைச்சகத்தில் உள்ள அனைவருக்கும் ‘அல்வா’ கொடுத்து நிதி
அமைச்சர் துவங்கிவைத்தார். நம்ம ஊர்ல அல்வா கொடுக்கறதுன்னா வேற விஷயம், அங்கு அனைத்து நல்ல
காரியத்தையும் ஸ்வீட்டுடன் ஆரம்பிக்கும் பழக்கம், ஸ்வீட் எடு கொண்டாடு
என்பது போல.
ஏன் ரகசியம்?
பட்ஜெட்டில் பல வரி விகிதங்கள் மாற்றப்படும், புதிய வரிகள்
போடப்படும், வரி
அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படும். அதேபோல் புதிய செலவு திட்டங்கள் வரும், நடைமுறையில் உள்ள
திட்டங்கள் நிறுத்தப்படலாம், அல்லது அவற்றிற்கு கூடுதல் தொகை ஒதுக்கலாம். இவை எல்லாம்
ஒவ்வொருவரையும் வெவ்வேறாக பாதிக்கும் என்பதால், இவை பற்றி
பாராளுமன்றத்திற்கு மட்டுமே முதலில் தெரியப்படுத்தவேண்டும். அதன் பிறகு, அங்கு நமது
உறுப்பினர்கள் விவாதம் செய்யும்போது, அதற்கு ஏதுவாக நமது சிந்தனைகளை ஊடகங்கள் மூலமாக, அல்லது நேரடி கடிதம்
மூலமாக வைக்கலாம். குறிப்பாக வரி திருத்தங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு வரி
ஏய்ப்பில் சிலர் ஈடுபடலாம், அல்லது அந்த திருத்தங்கள் நாடாளுமன்றதிற்கு வருவதையே தடுக்க
முயற்சிக்கலாம் என்ற நோக்கில் பட்ஜெட் இரசியமாக தயாரிக்கப்படுகிறது.
பட்ஜெட் கெடுபிடி
‘நார்த்
பிளாக்’
(north block) என்ற கட்டிடத்தில் நிதி அமைச்சகம் இயங்குகிறது. இதில் உள்ள
அடித்தளத்தில் பட்ஜெட், கூடுதல் அட்டவணைகளும் அச்சிடப்படுகின்றன. பட்ஜெட் உரை
நாளன்றுதான் காலையில் அச்சிடப்பட்ட பட்ஜெட் உரை நாடாளுமன்றத்திற்கு
எடுத்துசெல்லப்படும்.
இதற்காக, 15 நாட்களுக்கு நிதி அமைச்சகத்தின் அலுவலர்கள்
எவரும் (கூடுதல் செயலர் வரை) நிதி அமைச்சகத்தை விட்டு வெளியே வரமுடியாது. நிதி
அமைச்சக ஊழியர்கள் மட்டுமல்லாது, சட்டம், செய்தி உள்ளிட்ட பிற துறை அலுவலர்கள் சிலரும்
நிதி அமைச்சகத்தில் இந்த வேலையில் இருப்பார்கள், அவர்களும் வெளியே
வரமுடியாது. உண்பது, உறங்குவது, அலுவக நடவடிக்கை செய்வது எல்லாமே
அலுவலகத்தில்தான். இவர்கள் யாவரும் கைபேசி கூட எடுத்து செல்லமுடியாது. இவர்களுக்கு
உணவு முதல் எல்லாமே அரசு செலவில் அளிக்கப்படும்; கூடுதலாக
ஊக்கத்தொகையும் தரப்படும் (சுமார் ஒரு மாத சம்பளம்). பட்ஜெட் உரையை நிதி அமைச்சர்
வாசித்த பிறகே இவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வருவார்கள்.
நார்த் பிளாக்கில் எல்லா இடங்களிலும் கைபேசி அலைவரிசையை
முறியடிக்கும் மின்னணு சாதனங்கள் வைக்கப்படும். எனவே, வெளியிருந்து எந்த
கைபேசி அழைப்பையும் நிதி அமைச்சகத்தில் உள்ளவர்கள் எடுக்க முடியாது. அமைச்சகத்தில்
உள்ள தரைவழி தொலைபேசிகள் மிக கவனமாக கண்காணிக்கப்படும். இணையதளம் மூலமாக
பெறப்படும் மின்னஞ்சல்களும் நிறுத்தப்படும். முக்கிய கணினிகள் தேசிய செய்தி
தொடர்பு மையத்தில் (National Informatics Centre) இருந்து
துண்டிக்கப்படும்.
எஃகு கதவுகளும், X-ரே ஸ்கேனர்களும் எல்லா வழிகளிலும் இருக்கும்.
எனவே அமைச்சகத்தின் உள்ளே செல்லும் நிதி அமைச்சர் முதல் அனைவரும் மூன்று அடுக்கு
பாதுகாப்பு வளையம் தாண்டி செல்லவேண்டும். இதற்காக பெரிய அளவில் காவல்துறை
அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
பாதுகாப்பு சேவை சரியாக உள்ளதா என்பதும் அவ்வப்போது
சோதிக்கப்படும். சிலரை பாதுகாப்பு வளையத்தில் ஊடுருவச் செய்வது இந்த சோதனை
நடத்தப்படும்.
பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சமும் ஒரு குறிப்பிட்ட
செயலாளருக்குத் தெரிந்தாலும், பட்ஜெட்டின் மொத்த வடிவம் கடைசிவரை நிதி
அமைச்சர், செயலாளருக்கு
மட்டுமே தெரியும்.
பட்ஜெட் ரகசியங்கள் வெளிவரா திருப்பது மிக முக்கியம்.
அமைச்சர்கள் எடுக்கும் ‘ரகசிய காப்பு பிரமாணத்திற்கு’ உண்மையாக இருப்பது
இவ்வாறான ரகசியங்களை பாதுகாப்பதில் உள்ளது.